வென்ற்வேத்வில் தமிழ்க் கல்வி நிலையமானது, 1988ம் ஆண்டு புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சிறார்களுக்குத் தமிழ் மொழிக் கல்வியுடன் தமிழர் பாரம்பரியங்கள் மற்றும் கலை கலாச்சாரங்களையும் புகட்டும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 

நடப்பு வருடத்தின் ஆடி 31ம் திகதி அன்று (July 31st) மூன்றரை அல்லது அதற்கும் கூடிய வயதை எய்தும் சிறார்கள் அனைவரும் பாடசாலையில் சேர்வதற்கு தகுதி உடையவராவர். பாலர்பள்ளி முதல் உயர்தரம் வரை தற்போது எமது பாடசாலையில் சுமார் 700 இற்கு மேற்பட்ட மாணவர்கள் தமிழ் கற்கின்றார்கள். 2010ம் ஆண்டு முதல் நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநில உயர்தரப் பரீட்சையில் பல மாணவர்கள் எமது பாடசாலையில் இருந்து தமிழ்ப் பாடத்தில் தோற்றுகிறார்கள். இவர்களது சிறந்த பெறுபேறுகள் எமது பாடசாலையின் கல்வித் தரத்திற்கு சான்று பகர்கின்றன. 

பெற்றோர்கள் அங்கம் வகிக்கும் நிர்வாகக் குழுவானது பாடசாலை நிர்வாகத்தைச் சிறப்புற நடாத்துகின்றது. எமது சமுதாயத்தின் தமிழ்க் கல்வியாளர்களும், தமிழ் ஆர்வலர்களும் தன்னார்வத் தொண்டர்களாகத் தமிழ் கற்பிக்கின்றார்கள். பெற்றோரும் மற்றுமுள தமிழ் பற்றாளர்களும் பாடசாலையின் பல்வேறு நடவடிக்கைகளிற்கு உதவுகின்றார்கள். இவர்கள் எல்லோருடைய அயராத தமிழ்ப் பணியினால் பாடசாலை தொடர்ந்து தமிழ்ப் பணியினை செவ்வனே செய்துவருகின்றது. 

இப்பாடசாலையில் சிறார்களுக்கு தமிழ் மொழியைப் பேச, எழுத, வாசிக்கக் கற்பிப்பதுடன் மட்டும் நின்றுவிடாது அவர்கள் சபை முன் தமிழில் பேசுவதற்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றது. மாணவர்கள் தமிழ் மொழியில் பேசும் ஆற்றலை ஊக்குவிக்கும் முகமாக இரண்டாம் தவணை ஆரம்பத்தில் பேச்சுப் போட்டியின் ஒரு கூறாக வாய்மொழித் தொடர்பாடல் போட்டியும் நடாத்தப்படுகின்றது. மாணவர்களின் தமிழ் அறிவை மேம்படுத்துவதற்காக மூன்றாம் தவணையில் தமிழ் அறிவுப் (வினாவிடை) போட்டிகள் நடாத்தப்படுகின்றன. எமது இணையத் தளத்தில் உள்ள பாடசாலை நாட்காட்டியில் இப்போட்டிகள் நடைபெறும் திகதிகளைப் பார்வையிடலாம்.

இத்துடன் மூன்றாம் தவணையின் நடுப்பகுதியில் நடாத்தப்படும் கலைவிழா நிகழ்ச்சிகளில் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து பங்குபற்ற வைப்பதன் மூலம் மாணவர்களின் முத்தமிழ் (இயல், இசை, நாடகம்) அறிவும், திறனும் வளர்க்கப்படுகின்றன. இவை தவிர மாணவர்களின் கற்கும் ஆற்றலை ஊக்குவிக்குமுகமாக வகுப்பு மற்றும் வீட்டு வேலைகள் மூலம் மாணவர்களது எழுத்து மற்றும் வாசிப்புத் திறன்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

மாணவர்களின் கற்கும் ஆற்றலை ஊக்குவிக்குமுகமாக நடாத்தப்படும் பேச்சுப் போட்டிகளிலும்இ வாய்மொழித் தொடர்பாடல் போட்டிகளிலும், தமிழ் அறிவுப் (வினாவிடை) போட்டிகளிலும், எழுத்து மற்றும் வாசிப்பு மதிப்பீடுகளிலும் பங்குபற்றும் மாணவர்களுக்கு வருட இறுதியில் நடைபெறும் வருடாந்தப் பொதுக்கூட்டம் மற்றும் இராப்போசன விருந்து என்பவற்றோடு கூடிய பரிசளிப்பு விழாவில் பரிசுக் கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும். 

ஒவ்வொரு வாரமும் மாணவர்கள் பாடசாலைக்கு வந்து தமிழ் கற்பதை ஊக்குவிக்கும் முகமாகஇ நூறு சதவீத வரவிற்கு பரிசளிப்பு விழாவில் சிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.